செய்திகள்
விமானப்படை முன்னாள் தளபதி பி.எஸ். தனோவா மற்றும் அபிநந்தன்

பாகிஸ்தான் ராணுவத்தின் முன்கள நிலைகளை முற்றிலும் அழிக்க தயார் நிலையில் இருந்தோம் - நினைவு கூர்ந்த விமானப்படை முன்னாள் தளபதி

Published On 2020-10-29 12:57 GMT   |   Update On 2020-10-29 12:57 GMT
அபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என அவரின் தந்தையிடம் தான் வாக்குறுதி கொடுத்ததாக இந்திய விமானப்படை முன்னாள் தளபதி பி.எஸ். தனோவா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தியது.    

இந்தியாவின் இந்த தாக்குதலால் கடும் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் மறுநாள் (2019 பிப்ரவரி 27) காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றது. உடனே பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டி அடித்தது.

இந்த சண்டையின் போது இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனின் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதால் அவர் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை போர் கைதியாக பாகிஸ்தான் சிறை பிடித்தது.

அபிநந்தனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது . அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளும் பாகிஸ்தானை எச்சரித்தன. இந்த அழுத்தம் காரணமாக மார்ச் 1-ந்தேதி அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், அபிநந்தன் தங்கள் பிடியில் இருந்த போது இவ்விவகாரம் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளின் உயர்மட்டத்திலான அவசர ஆலோசனை நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் பாஜ்வாவின் கால்கள் நடுங்கியதாவும், விவாதத்தின் போது அவருக்கு வியர்த்து ஊற்றியதாகவும் நேற்று பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அவரை (அபிநந்தனை) இப்போது விட்டுவிடுவோம்.. இல்லையேல் பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கூறியதாக அந்த கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் அயாஸ் சாதிக் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரின் பேச்சு குறித்து இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி பி.எஸ்.தனோவா கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பி.எஸ். தனோவா கூறியதாவது:-

அபிநந்தனை நிச்சயம் மீட்டுவிடுவோம் என அவரின் தந்தையிடம் நான் வாக்குறுதி கொடுத்தேன். பாகிஸ்தான் மந்திரியின் பேச்சில் (பாகிஸ்தான் மீது சரியாக 9 மணியளவில் இந்தியா தாக்குதல் நடத்தும்) நமது ராணுவம் பதிலடி தாக்குதலுக்கு தயாராக இருந்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் முன்கள நிலைகளை முற்றிலும் அழிக்க நாம் தயார்நிலையில் இருந்தோம். அவர்களுக்கு (பாகிஸ்தான்) நமது வலிமை என்னவென்று நன்றாக தெரியும்.

என தெரிவித்தார்.  
Tags:    

Similar News