செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

கேரள தங்க கடத்தல் வழக்கு- தனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்த ஸ்வப்னா

Published On 2020-10-01 10:07 GMT   |   Update On 2020-10-01 10:07 GMT
அமலாக்க துறையின் அதிரடி விசாரணையில் ஸ்வப்னா கேரளாவில் உள்ள தனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்திருப்பது தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரணை நடத்தியது. அவர்கள் கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் அதிகாரியாக பணிபுரிந்த ஸ்வப்னா, அவரது நண்பர் சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரீத்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கை அமலாக்க துறை, சுங்க இலாகாவினரும் விசாரிக்க தொடங்கினர்.

இதில் ஸ்வப்னாவுக்கு கேரளாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் கணக்கு இருப்பதும், சில வங்கிகளில் லாக்கர்கள் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

அந்த லாக்கர்களை திறந்து சோதனை செய்தபோது அதில் கோடிக்கணக்கில் பணமும், நகைகளும் இருந்தன. இது தொடர்பாக ஸ்வப்னாவிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

அமலாக்க துறையின் அதிரடி விசாரணையில் ஸ்வப்னா கேரளாவில் உள்ள இன்னொரு தனியார் வங்கியில் ரூ.38 கோடி டெபாசிட் செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் இந்த வங்கியில் உள்ள ஸ்வப்னாவின் கணக்குக்கு மேலும் சிலரிடம் இருந்து பணம் வந்துள்ளது. அதோடு இந்த வங்கியில் தான் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் கணக்கும் உள்ளது.

இதனை கண்டுபிடித்த அமலாக்க துறையினர் இது தொடர்பான ஆவணங்களை திரட்டி வருகிறார்கள். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் வங்கியின் மானேஜரிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

இதற்காக தனியார் வங்கி மானேஜருக்கு விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளனர். அப்போது இந்த விவகாரத்தில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று அமலாக்க துறையினர் கருதுகிறார்கள்.
Tags:    

Similar News