செய்திகள்
சத்தீஸ்கர்: வேன் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்கிராப் மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் நேற்று இரவு 11 மணியளவில் 4 பயணிகளுடன் ஒரு வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது சாலையின் மறுபுறம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
லாரி மோதிய வேகத்தில் வேனின் முன்புறம் முற்றிலும் சிதைந்தது. இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 4 பயணிகளும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிவேகமாக லாரியை ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த லாரி டிரைவர் தப்பிச்சென்றுவிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.