செய்திகள்
நீதிமன்றம்

கர்ப்பிணி உயிரிழந்த வழக்கில் 2 டாக்டர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை- புனே கோர்ட்டு தீர்ப்பு

Published On 2020-09-30 08:50 GMT   |   Update On 2020-09-30 08:50 GMT
கர்ப்பிணி பலியான வழக்கில் சிகிச்சை அளித்த 2 டாக்டர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி புனே மாவட்ட செசன்சு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
புனே:

புனேயை சேர்ந்தவர் அனில் ஜெக்தாப். ஆம்புலன்சு டிரைவர். இவரது மனைவி ராஜஸ்ரீ(வயது21). கடந்த 2012-ம் ஆண்டு ராஜஸ்ரீ நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதனை தொடர்ந்து அனில் ஜெக்தாப் மனைவியை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தார். அங்கு டாக்டர் ஜித்தேந்திரா(வயது40), சச்சின் தேஷ்பாண்டே(39) ஆகியோர் ராஜஸ்ரீக்கு சிகிச்சை அளித்தனர். சம்பவத்தன்று பிரசவம் பார்ப்பதற்காக மற்றொரு டாக்டர் விஜய் என்பவரும் உடன் இருந்தார்.

இந்த நிலையில் பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை நடத்தினர். இதில் அவருக்கு அதிகப்படியான ரத்தபோக்கு ஏற்பட்டதால் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜஸ்ரீ உயிரிழந்தார்.

இதனால் பாதிக்கப்பட்ட அனில் ஜெக்தாப் சம்பவம் குறித்து தெகுரோடு போலீசில் சிகிச்சை அளித்த 3 டாக்டர்கள் மீது புகார் அளித்தார். இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஜித்தேந்திரா மற்றும் சச்சின் தேஷ்பாண்டே ஆயுர்வேத மருத்துவம் பயின்றது தெரியவந்தது. மேலும் சட்டவிரோதமாக ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததால் ராஜஸ்ரீ சிகிச்சை பலனின்றி பலியானது தெரியவந்தது.

இதையடுத்து மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் டாக்டர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நிறையில், சம்பந்தப்பட்ட 2 டாக்டர்கள் மீது குற்றம் நிரூபணமானது. இதனால் அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி விக்ரம் ராஜாராம் தீர்ப்பு அளித்தார். மேலும் உடன் சிகிச்சை அளித்த மற்றொரு டாக்டரான விஜய் மீது ஆதாரம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
Tags:    

Similar News