செய்திகள்
லூடோ கேமில் என் தந்தை என்னை ஏமாற்றிவிட்டார் - குடும்ப நல நீதிமன்றம் சென்ற 24 வயது இளம் பெண்
லூடோ கேமில் தந்தை என்னை ஏமாற்றிவிட்டதாக கூறி 24 வயது நிரம்பிய இளம் பெண் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
போபால்:
கொரோனா காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இவர்களுக்கு பெரும்பாலும் ஆன்லைன் விளையாட்டுகளே பொழுதுபோக்காக உள்ளது. பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்த பின்னர் வேறு ஆன்லைன் விளையாட்டுகளில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக லூடோ கேம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்பமான ஆன்லைன் விளையாட்டாக உள்ளது. இதில் 2 முதல் 4 பேர் வரை இணைந்து விளையாடலாம்.
இந்நிலையில், இந்த லூடோ கேமில் தந்தையே தன்னை ஏமாற்றிவிட்டதாக 24 வயது இளம் பெண் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
மத்தியபிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்த 24 வயது இளம் பெண் போபால் குடும்பநல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில் லூடோ கேமில் தனது தந்தையை மிகவும் நம்பியதாகவும், ஆனால் அவர் கேம் விளையாட்டின்போது தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், தந்தையே தன்னை ஏமாற்றுவார் என நினைத்தது இல்லை என்றும் கூறி 24 வயது நிரம்பிய இளம்பெண் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
லூடோ விளையாட்டில் தந்தையே தன்னை ஏமாற்றியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குத்தொடர்ந்த பெண்ணுக்கு மனநலம் ரீதியிலான கவுன்சிலிங்க் வழங்க உத்தரவிட்டது.
இதையடுத்து, அந்த இளம்பெண்ணுக்கு இதுவரை 4 முறை கவுன்சிலிங் வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் செயல்பட்டுவரும் மனநல கவுன்சிலர் சரித்தா தெரிவித்துள்ளார்.
லூடோ கேமில் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தந்தை மீது 24 வயது இளம்பெண் குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.