செய்திகள்
நளின்குமார் கட்டீல், எடியூரப்பா

எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு பொய்யானது: நளின்குமார் கட்டீல்

Published On 2020-09-25 02:13 GMT   |   Update On 2020-09-25 02:13 GMT
முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பொய்யான குற்றச்சாட்டை எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் கூறியுள்ளார் என்று பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமாா கட்டீல் மறுத்துள்ளார்.
பெங்களூரு :

முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் ஊழல் குற்றச்சாட்டை கூறியது. இதை பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமாா கட்டீல் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதல்-மந்திரி எடியூரப்பா மீது காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஊழல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது. பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் கூறியுள்ளார். காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஊழல் வழக்கில் தொடர்புடையவர்.

இதற்காக அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை அருகில் வைத்துக் கொண்டு மேலிட பொறுப்பாளர், முதல்-மந்திரி எடியூரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டை கூறுவது வேடிக்கையாக உள்ளது. அதே போல் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Tags:    

Similar News