செய்திகள்
சசிகலா

எனது விடுதலை குறித்து 3-வது நபர்களுக்கு தகவல் தரக்கூடாது - பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சசிகலா கடிதம்

Published On 2020-09-24 18:42 GMT   |   Update On 2020-09-24 18:42 GMT
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எனது விடுதலை குறித்து 3-வது நபர்களுக்கு தகவல் தரக்கூடாது என்று பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு சசிகலா திடீர் கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரியில் முடிவடைகிறது. இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி என்பவர், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலா விடுதலை தொடர்பான கேள்விகளை கேட்டு பதில் பெற்றார்.

அதில் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகம், சசிகலா தனக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை செலுத்தினால் வருகிற ஜனவரி மாதம் 27-ந் தேதி சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்றும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 13 மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டும் என்றும் பதிலளித்தது. விடுமுறை நாட்களை கழித்து பார்த்தால், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று தகவல் வெளியாகி வந்தது. ஆனால் சிறை விதிமுறைகளின்படி சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் கிடைக்காது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு விடுமுறை நாட்கள் எத்தனை கிடைக்கும், இதுவரை எத்தனை நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்பது குறித்த விவரங்களை வழங்குமாறு பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்திருந்தார். அதற்கு அந்த சிறை நிர்வாகம், சசிகலா அனுப்பிய ஒரு கடிதத்தை இணைத்து வழங்கி, பதில் அளித்துள்ளது. சசிகலா கேட்டுக் கொண்டதை அடுத்து தங்களால் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்று சிறை நிர்வாகம் கூறியுள்ளது.

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை தலைமை சூப்பிரண்டுக்கு சசிகலா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

எனக்கு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் விடுதலை குறித்து 3-வது நபர்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து தகவல்களை பெறுவதாக எனக்கு தெரியவந்துள்ளது. அந்த நபர்கள், விளம்பரத்திற்காகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்திலும் இத்தகைய விவரங்களை கேட்கிறார்கள். நான் சட்டப்படி சரியான நேரத்தில் விடுதலை ஆவதை விரும்பாததால், என்னை பிரச்சினையில் சிக்கவைப்பதே அந்த நபர்களின் உண்மையான நோக்கம் ஆகும்.

டெல்லி திகார் சிறையில் வேதபிரகாஷ்ஆர்யா வழக்கில் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டனர். அந்த சிறை நிர்வாகம், தகவலை வழங்க மறுத்துவிட்டது. இதை மத்திய தகவல் ஆணையமும் உறுதி செய்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அதனால் எனது தண்டனை மற்றும் விடுதலை குறித்த தகவலை வழங்குவது என்பது, எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஊடுருவுவது போன்றது ஆகும். அதனால் எனது தண்டனை மற்றும் நான் விடுதலை செய்யப்படும் தேதி, பிற தகவல்களை 3-வது நபர்களுக்கு வழங்கக்கூடாது.

இவ்வாறு சசிகலா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News