செய்திகள்
எடியூரப்பா

கர்நாடக மந்திரி சபை விரிவாக்கம் - முதல் மந்திரி எடியூரப்பா 17-ம் தேதி டெல்லி பயணம்

Published On 2020-09-13 23:37 GMT   |   Update On 2020-09-13 23:37 GMT
மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பா.ஜ.க. தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா வரும் 17-ம் தேதி டெல்லி செல்கிறார்.
பெங்களூரு:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜ.க ஆட்சி அமைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர்கள் மந்திரி பதவி வழங்கும்படி முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய எடியூரப்பா முடிவு செய்துள்ளார்.

கடந்த மாதமே (ஆகஸ்டு) மந்திரி சபையை விரிவாக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் மழை பாதிப்பு, கொரோனா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் முதல்-மந்திரி எடியூரப்பாவின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.

அதுபோல, எடியூரப்பாவும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததால், அவரால் டெல்லிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர், வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் சட்டசபை கூட்டத்தொடருக்கு முன்பாக மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருக்கிறார்.

இந்நிலையில், மந்திரி சபை விரிவாக்கம் குறித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா வரும் 17-ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்ல முடிவு செய்திருக்கிறார். இந்த பயணம் 3 நாட்கள் கொண்டதாக இருக்கும் என்று முதல்-மந்திரி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மந்திரிசபையை விரிவாக்கம் செய்வதா?, அல்லது மாற்றி அமைப்பதா? என்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

மேலும், மந்திரி சபையை மாற்றி அமைப்பது குறித்தும் கட்சி மேலிட தலைவர்களுடன், எடியூரப்பா ஆலோசனை நடத்த உள்ளார்.

முதல்-மந்திரி எடியூரப்பா டெல்லி பயணத்தின் போது சில மத்திய மந்திரிகளை சந்தித்து பேசவும் முடிவு செய்திருக்கிறார். கர்நாடகத்தில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ரூ.8 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகத்தில் மழை பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்ள கூடுதல் நிவாரண நிதி வழங்கும்படி மத்திய மந்திரிகளை சந்தித்து பேச இருக்கிறார்.
Tags:    

Similar News