செய்திகள்
பெங்களூரு வன்முறை தொடர்பாக இதுவரை 340 பேர் கைது
பெங்களூரு வன்முறை தொடர்பாக இதுவரை 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தியின் சகோதரியின் மகன் நவீன் (வயது 27). இவர் சிறுபான்மை சமுதாயத்தினர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்டு இருந்தார்.
இதனால் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 11 ஆம் தேதி வன்முறை வெடித்தது.
நூற்றுக்கணக்கில் குவிந்த வன்முறையாளர்கள் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல்நிலையம், அப்பகுதிகளில் இருந்த குடியிருப்பு பகுதிகளை சூறையாடினர். வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. வன்முறையை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவங்களில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். 50 போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து முகநூலில் அவதூறு கருத்து பதிவு செய்தது குறித்து நவீனிடம் போலீசார் விசாரித்தனர்.
5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவதூறு கருத்து பதிவிட்டது நான் தான் என்று நவீன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் எஸ்டிபிஐ கட்சியின் உறுப்பினர்கள் உள்பட 340 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
வன்முறை காரணமாக கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் வரும் 18 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சேதமடைந்த பொது சொத்திற்கான தொகையை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று மாநில மந்திரி பொம்மை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.