செய்திகள்
பிரணாப் முகர்ஜி

டெல்லி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை - பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் மோசமானது

Published On 2020-08-12 20:02 GMT   |   Update On 2020-08-12 20:02 GMT
டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது.
புதுடெல்லி:

84 வயதான முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 9-ந் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்தார். இதைத்தொடர்ந்து மறுநாள் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டதோடு, இடது கை உணர்ச்சியற்றதாகவும் இருந்தது. இதைத்தொடர்ந்து, ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவருக்கு மூளையில் ரத்தம் உறைந்து இருப்பது தெரியவந்தது.

இதனால் டாக்டர்கள் ஆபரேஷன் செய்து மூளையில் இருந்த ரத்த கட்டியை அகற்றினர். ஆபரேஷனுக்கு பிறகு பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமானதால் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கிடையே, பிரணாப் முகர்ஜிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டாக்டர்கள் அடங்கிய குழு ஒன்று அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை நேற்று காலை மிகவும் மோசம் அடைந்தது.

அவரது உடல்நிலை குறித்து ஆஸ்பத்திரியின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மூளையில் உள்ள ரத்த கட்டி அகற்றப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று, பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர் விரைவில் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து உள்ளார்.



பிரணாப் முகர்ஜி பூரண நலம் பெற வேண்டி டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்கள். அவரது சொந்த ஊரான மேற்கு வங்காள மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள கிர்னாகர் கிராமத்திலும் பூஜை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News