செய்திகள்
இறுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் யுஜிசி வாதம்
இறுதித் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானியக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கல்லூரி தேர்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிக்கூட தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
முதல் இரணடு வருடத்திற்கான செமஸ்டர் தேர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தன. ஆனால், இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மாநில அரசுகள் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும். பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தேர்வுகளை நடத்த முன்வந்துள்ளன என்று தெரிவித்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது அவர் கூறுகையில் ‘‘பட்டம் வழங்குவதற்கான விதிகளை பல்கலைக்கழக மானியக் குழுவால் மட்டுமே பரிந்துரைக்க முடியும். மாநில அரசுகள் விதிகளை மாற்ற முடியாது. தேர்வுகள் எழுதாதது மாணவர்கள் நலத்திற்கு நல்லதாக அமையாது. இறுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எழுதாக மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படாது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் விதிகளை மீறியுள்ளன’’ என வாதிட்டார்.