செய்திகள்
நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல்: சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா
தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் எழுதிய கடிதம் ஒன்றை ரியா சக்ரபோர்த்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந்தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சி.பி.ஐ. தன் வசம் எடுத்து உள்ளது. சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மற்றும் குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரியாவிடம் மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகை ரியா, சுஷாந்த் கைப்பட எழுதியது என கூறி டைரியின் பக்கம் ஒன்றை அவரது வக்கீல் மூலமாக சமூகவலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
நன்றிகடன் பட்டவர்கள் என்ற தலைப்பில் உள்ள அந்த பக்கத்தில், "நான் என் வாழ்க்கைக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். எனது வாழ்வில் லில்லுவுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் பெபுவுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் சாருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். என் வாழ்வில் மேடமுக்கு நன்றி கடன் பட்டுள்ளேன். என் வாழ்வில் புட்ஜிக்கும் நன்றி கடன் பட்டுள்ளேன்" என கூறப்பட்டுள்ளது.
இதில் பெபு என்று குறிப்பிட்டு இருப்பது ரியா எனவும், லில்லு ரியாவின் சகோதர் சோவிக் எனவும், சார் என்பது ரியாவின் தந்தை எனவும், மேடம் அவரின் தாய் எனவும், புட்ஜ் நாய் குட்டி எனவும் ரியா தெரிவித்து உள்ளார். மேலும் தண்ணீர் பாட்டில் ஒன்றின் படத்தை வெளியிட்டுள்ள ரியா அதுதான் தன்னிடம் உள்ள சுஷாந்த் சிங்கின் சொத்து எனவும் தெரிவித்து உள்ளார்.