செய்திகள்
பில் கேட்ஸ்

47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போக பில் கேட்ஸ் காரணம் என வைரலாகும் பகீர் தகவல்

Published On 2020-08-05 04:00 GMT   |   Update On 2020-08-05 04:00 GMT
இந்தியாவில் சுமார் 47 ஆயிரம் குழந்தைகள் பாதிப்புக்கு பில் கேட்ஸ் தான் காரணம் என கூறும் பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பேஸ்புக்கில் வைரலாகும் தகவல் ஒன்றில், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் பில் கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டுபிடித்த போலியோ தடுப்பு மருந்து இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகளை முடமாக்கி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

வைரலாகும் பகீர் தகவலுடன் பில் கேட்ஸ் குழந்தை ஒன்றிற்கு போலியோ தடுப்பு மருந்து கொடுக்கும் புகைப்படமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பில் கேட்சின் தடுப்பு மருந்து ஆயிரக்கணக்கான குழந்தைகளை ஆற்றலற்று போக செய்தது என்றும், இதனால் அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டார் என கூறப்பட்டுள்ளது. 



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பில் கேட்சுக்கு எதிராக மருத்துவர்கள் வழக்கு தொடரவும் இல்லை அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படவும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்தியாவில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷன் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மேலும் உலக சுகாதா மையம் போலியோ தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது என தெரிவித்து உள்ளது. அந்த வகையில் இந்தியாவில் 47 ஆயிரம் குழந்தைகள் ஆற்றலற்று போக பில் கேட்ஸ் காரணம் இல்லை என்றும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்படவில்லை என்பதும் உறுதியாகி விட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News