செய்திகள்
சுஷாந்த் தற்கொலை விவகாரம்: எனக்கு நீதி கிடைக்கும் எனக்கூறி ரியா சக்ரபோர்த்தி வீடியோ வெளியீடு
சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள ரியா சக்ரபோர்த்தி, நீதி கிடைக்கும் என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம்தேதி பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். ஆனால், எந்தவொரு தற்கொலை கடிதமும் அவரது இல்லத்தில் சிக்கவில்லை. மன அழுத்தம் காரணமாக சுஷாந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மும்பை போலீசார் தெரிவித்தனர். ஆனால், இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி, சுஷாந்த் மறைந்து ஒரு மாதம் ஆன பின்னர், சுஷாந்த் சிங் மறைவுக்கு நீதி வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளியே வரும் என்றும், அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு கடிதம் எழுதினார். மேலும், எந்த காரணம் அவரை இந்த முடிவை எடுக்க வைத்தது என்பது குறித்தும் தனக்கு தெரிய வேண்டும் என்றும் கூறினார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ரியா சக்ரபோர்த்தியை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ரசிகர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த சிராக் பஸ்வான் மகாராஷ்ட்ர முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். மேலும், மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவாரின் மகன் பர்த் பவாரும், சிபிஐ விசாரணையை வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்துள்ளார்.
கே.கே. சிங் தனது புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு சுஷாந்த் பாலிவுட்டில் நல்ல நிலையில் இருக்கும்போது ரியா சகர்போர்த்தியின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என் மகனிடம் அவர் வாழ்ந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பதாக அவரிடம் கூறி அவரை அந்த வீட்டை காலி செய்யுமாறும் கூறியதாகவும், இது அவரது மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும் சுஷாந்த் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் அவருக்கு தொடர்பே இல்லாத ஆட்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், சுஷாந்த்தின் லேப்டாப், பணம், கிரெடிட் கார்டுகள், பின் நம்பர் ஆகியவற்றை ரியா குடும்பத்தினர் திருடிவிட்டதாகவும் கே.கே. சிங் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரையடுத்து ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது ராஜீவ் நகர் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.
இந்நிலையில் தனது மீதான புகாரை பாட்னா காவல்துறையிடமிருந்து மும்பை காவல்துறைக்கு மாற்றக் கோரி ரியா சக்ரவர்த்தி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து உத்தரவு வழங்கும் வரை சுஷாந்த் தந்தை கொடுத்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் பீகார் போலீஸ் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை மேற்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. பீகார் அரசு வழக்கை மும்பைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தையும் நாடியுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு குறித்து ரியா சக்ரபோர்த்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘நான் கடவுளையும், நீதித்துறையையும் அதிகமாக நம்புகிறேன். நான் நீதியை பெறுவேன் என்றும் நம்புகிறேன். சத்தியமே ஜெயம். உண்மை வெல்லும்’’ என்று தெரிவித்துள்ளார்.
#WATCH: Rhea Chakraborty releases video on #SushantSinghRajputDeathCase.
— ANI (@ANI) July 31, 2020
She says, "I've immense faith in God & the judiciary. I believe that I'll get justice...Satyameva Jayate. The truth shall prevail." pic.twitter.com/Fq1pNM5uaP