செய்திகள்
சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள்
ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக கூறும் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரே கல்லில் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் இருப்பதாக கூறும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படங்கள் கர்நாடக மாநிலத்தின் ஆற்றங்கரையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக கர்நாடக மாநிலத்தின் சிவாக்ஷி ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்து உள்ளது. இதனால் ஒரு லட்சம் சிவ லிங்கங்கள் காணப்படுகிறது என வைரல் பதிவுகளில் கூறப்பட்டு உள்ளது.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், புகைப்படங்களில் உள்ள சிவலிங்கங்கள் சஹஸ்ரலிங்காவில் எடுக்கப்பட்டவை என தெரியவந்துள்ளது. சஹஸ்ரலிங்கா கர்நாடக மாநிலத்தின் ஷாமலா ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரபல வழிபாட்டு தளம் ஆகும். இங்கு ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ளன.
இந்த தளத்தில் உள்ள சிவலிங்கங்கள் 1678 முதல் 1718 காலக்கட்டத்தில் செதுக்கப்பட்டவை என சஹஸ்ரலிங்கா தளத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.