செய்திகள்
ரபேல் போர் விமானம்

ரபேல் விமானங்கள் இன்று மதியம் இந்தியாவில் தரையிறங்குகின்றன: ‘Golden Arrows’ படைப்பிரிவில் சேர்ப்பு

Published On 2020-07-29 04:56 GMT   |   Update On 2020-07-29 04:56 GMT
பிரான்ஸில் இருந்து புறப்பட்ட ஐந்து ரபேல் போர் விமானங்கள் இன்று மதியம் இந்தியாவின் அம்பாலா விமானத்தளத்தை வந்தடைகின்றன.
பிரான்சிடம் இருந்து 36  ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த 36 ரபேல் ஜெட் விமானங்களில் 30 போர் விமானங்கள் மற்றும் 6 பயிற்சி விமானங்கள் அடங்கும். முதல்கட்டமாக பிரான்ஸ் நாட்டில் இருந்து அதிநவீன 5 ரபேல் போர் விமானங்கள், நேற்றுமுன்தினம் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டன.

பயணத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான தளத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டன. இதையடுத்து தனது பயணத்தை மீண்டும் தொடங்கிய ரபேல் விமானங்கள் தொடர்ந்து இந்தியா நோக்கி புறப்பட்டன.

ரபேல் போர் விமானங்களின் பயணத்தின்போது உரிய உதவிகளை வழங்குவதற்காக பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானங்களும் இந்த பயணத்தில் உடன் வந்தன. பயண தூரம் அதிகம் என்பதால் ரபேல் போர் விமானங்களுக்கு நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டது. 30 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளை இந்திய விமானப்படை தனது டுவிட்டரில் பகிர்ந்தது.

7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு இன்று மதியம் இந்தியாவின் அரியானா மாநிலம் அம்பாலா விமானத்தளதில் தரையிறங்குகிறது.

விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா விமானங்களை பெற்றுக்கொள்வார். பின்னர் தங்க அம்புகள் (Golden Arrows) பிரிவில் இணைக்கப்படும்.

ரபேல் போர் விமானங்கள் வருகையால், அம்பாலா விமான நிலையத்தைச் சுற்றியுள்ள 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானம் தரையிறங்கும்போது புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என அம்பாலா போக்குவரத்து டி.எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லையில் இருந்து 200 கி.மீட்டர் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது.
Tags:    

Similar News