செய்திகள்
அசாதுதீன் ஓவைசி

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது - அசாதுதீன் ஓவைசி

Published On 2020-07-28 23:58 GMT   |   Update On 2020-07-28 23:58 GMT
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததையடுத்து அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கோவில் கட்டும் பணிகளை நிர்வகிக்க 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது. 

கோவில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருட்களை பல்வேறு தரப்பினரும் இந்த அறக்கட்டளைக்கு வழங்கி வருகின்றனர்.
 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த விழாவில் நேரடியாக பங்கேற்க 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது என அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஓவைசி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், அரசியல் சட்டத்தின் கீழ் பதவிப் பிரமாணம் எடுத்த பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பங்கேற்றால் அது அரசியல் சட்டத்தை மீறிய செயலாகி விடும். அரசியல் சாசனத்தின் அடிப்படை மதச்சார்பற்ற தன்மை தான் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News