செய்திகள்
உலகின் 70 சதவிகித புலிகள் இந்தியாவில் தான் உள்ளது - சுற்றுச்சூழல் துறை மந்திரி தகவல்
உலகின் 70 சதவிகித புலிகள் இந்தியாவில் தான் உள்ளது என மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவின் தேசிய விலங்கான புலி உள்ளது. வேட்டையாடுதல், காடுகள் அழிக்கப்படுதல் என பல்வேறு காரணங்களால் அழிவின் விளிம்பில் இருந்த புலிகளை பாதுகாக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முயற்சி மேற்கொண்டனர். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், உலக புலிகள் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் சார்பில்
இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாட்டில் உள்ள வனவிலங்குகள் தொடர்பான தகவலளை சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜவடேகர்,’உலக புலிகள் எண்ணிக்கையில் 70 சதவிகிதம் இந்தியாவில் தான் உள்ளது. இதை நாடு பெருமையாக கருதுகிறது. நம்மிடம் 30 ஆயிரம் யானைகள், 3 ஆயிரம் ஒற்றை கொம்புகாட்டாமிருகங்கள், 500-க்கும் அதிகமான சிங்கங்கள் உள்ளன’ என தெரிவித்தார்.
1973 ஆம் ஆண்டு இந்தியாவில் புலிகள் வசிக்கும் இடங்களாக 9 இடங்கள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் புலிகளின் வசிப்பிடங்கள் 50 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக அளவில் புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான உதவிகளை செய்ய அனைத்து நாடுகளும் போதிய ஆலோசனைகள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.