செய்திகள்
ஜிஎஸ்டி

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பிட்டுத் தொகை முழுவதும் வழங்கப்பட்டு விட்டன: நிதியமைச்சகம்

Published On 2020-07-27 13:39 GMT   |   Update On 2020-07-27 13:39 GMT
2019-2020-ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பிட்டுத்தொகை முழுவதும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017-ம் ஆண்டின் ஜூலை மாதம் 1-ம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு இழப்பீடுகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மாநிலங்களின் ஆண்டு வருவாய் வளர்ச்சி 14 சதவிகிதத்தை விடக் குறைவாக இருந்தால் மத்திய அரசு அதற்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால் குறித்த நேரத்தில் மத்திய அரசு இந்த தொகையை வழங்கவில்லை என்று மாநிலங்கள் குறை கூறி வந்தன. டிசம்பர் மாதத்தில் இதுகுறித்து மத்திய அரசிடம் மாநில அரசுகள் முறையிட்டன.

2019 ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக ரூ.35,298 கோடி வழங்கப்பட்டது. அதன் பின்னர் அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையான ரூ.34,053 கோடியை மிகவும் தாமதமாக இரண்டு தவணைகளாக மத்திய அரசு வழங்கியது. முதல் தவணையை பிப்ரவரி மாதத்திலும் இரண்டாவது தவணையை ஏப்ரல் மாதத்திலும் வழங்கியது.

சமீபத்தில் மார்ச் மாதத்திற்கான 13,806 கோடி ரூபாயை வழங்கியது. இதன்மூலம் 2019-2020-ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பிட்டுத்தொகை முழுவதும் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு விட்டன என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News