செய்திகள்
ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் வழக்கு- ஸ்வப்னா சுரேஷின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

Published On 2020-07-21 06:57 GMT   |   Update On 2020-07-21 06:57 GMT
கேரளா தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷின் என்.ஐ.ஏ. காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது. மேலும், வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர், பைசல் பேரத் ஆகிய நான்கு பேர் மீது தீவிரவாத நிதி திட்டல், தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல், தீவிரவாத செயலுக்கான கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளி சந்தீப் நாயரின் மனைவி சௌமியா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் என்.ஐ,ஏ. அதிகாரிகள் பெங்களூரில் கைது செய்து கேரளா அழைத்து வந்தனர்.

இதையடுத்து இருவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அமைப்பினருக்கு அனுமதி வழங்கினர்.

இந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட என்.ஐ.ஏ.காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்றுடன் காவல் முடிவடைய இருந்த நிலையில் என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று ஸ்வப்னாவுக்கு 3 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News