செய்திகள்
ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட இடம்

கான்பூர் என்கவுண்டர் வழக்கு- மேலும் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

Published On 2020-07-09 03:21 GMT   |   Update On 2020-07-09 03:21 GMT
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் என்கவுண்டர் வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கான்பூர்:

உத்தர பிரதேச மாநிலத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முக்கிய ரவுடியான விகாஸ் துபேயை கைது செய்வதற்காக,  கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிகாரு கிராமத்திற்கு போலீசார் சென்றனர். அப்போது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், போலீஸ் தரப்பில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசார் உயிரிழந்தனர். 

போலீசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர். தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் 20 போலீஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. 

தலைமறைவான ரவுடி விகாஸ் துபேயின் வீடு பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபே, ஹமிர்பூர் மாவட்டம் மவுதாகாவில் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இதேபோல் இந்த வழக்கில் நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றபோது, குற்றவாளி பிரபாத் மிஷ்ரா போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளான். அப்போது அவனை போலீசார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். அவர்களை மீறி தப்பி ஓடியதால் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். இதில் பலத்த காயமடைந்த பிரபாத் மிஷ்ரா, உடனடியாக கான்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கான்பூர் என்கவுண்டரின்போது ரவுடி விகாஸ் துபேயுடன் இருந்த பகுவா துபேயை எட்டாவா பகுதியில் இன்று போலீசார் சுட்டுக்கொன்றனர். அவனிடம் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Tags:    

Similar News