செய்திகள்
என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் போலீசார்

உ.பி.-யில் 8 போலீசார் சுட்டுக்கொலை: விகாஸ் துபேயின் கூட்டாளி கைது

Published On 2020-07-05 05:32 GMT   |   Update On 2020-07-05 05:32 GMT
உத்தர பிரதேசத்தில் எட்டு போலீசார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விகாஸ் துபேயின் கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த விகாஸ் துபேயை தேடி  டி.எஸ்.பி தேவேந்திர மிஸ்ரா தலைமையில் போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.

போலீசார் வரும் தகவல் ஏற்கனவே விகாஸ் துபேயுக்கு தெரிந்துள்ளது. இதனால் போலீசாரை கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டு வீழ்த்த திட்டம் தீட்டினான். போலீசார் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் அவர்களை ஒரு இடத்தில் தடுக்க வேண்டும் என்று ஜேசிபி-களை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்தான்.

போலீசார் அந்த இடத்தை அடைந்ததும், ஜேசிபி குறுக்கே நிறுத்தப்பட்டதால் வாகனத்தில் இருந்து இறங்கினர். அப்போது வீட்டின் மாடிகளில் தயாராக இருந்த கும்பல் போலீசாரை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். சுதாரித்த போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.

என்றாலும் டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா உள்பட 8 பேர் போலீசார் உயிரிழந்தனர். இரண்டு ரவுடிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தை உலுக்கியது.

கான்பூரை சுற்றியுள்ள மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது விகாஸ் துபேயின் கூட்டாளி தயா சங்கர் அக்னிஹோத்ரி (வயது 42) கல்யான்பூர் என்ற பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்து கைது செய்ய முயற்சி செய்தனர். அப்போது அவர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். போலீசார் அவரின் காலில் சுட்டு பிடித்துள்ளனர்.
Tags:    

Similar News