செய்திகள்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணம் - பிரதமர் மோடி இரங்கல்
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான "M.S. Dhoni: The Untold Story" படத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 34. மும்பை பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் சிங்கின் இந்த திடீர் மரணம் பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருடைய மேலாளர் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், சுஷாந்த் சிங் மறைவு தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், பொழுதுபோக்கு உலகில் சுஷாந்த் சிங்கின் வளர்ச்சி பலருக்கு உத்வேகம் அளித்திருப்பதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.