செய்திகள்
எங்கே போனது சமூக இடைவெளி?.... கிழக்கு டெல்லி மற்றும் மதுரையில் நடந்த அவலம்....
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சமூக இடைவெளிதான் ஒரே ஆயுதம் என்று கூறி வரும் நிலையில், கிழக்கு டெல்லி மற்றும் மதுரையில் மக்கள் ஒரே இடத்தில் கூடிய அவலம் நடந்தேறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது.
மக்கள் வீட்டிற்குள்ளேயே இருந்தால் மட்டுமே கொரோனா வைரஸ் தொற்றின் சங்கிலி தொடர்பை அழிக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான இடத்தில் மக்கள் பொது இடங்களில் நூற்றுக்கணக்கில் கூடி ஊரடங்கை வீணடிக்கச் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் அதிகம் பாதித்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் டெல்லி மற்றும் தமிழகத்தில் இன்று மக்கள் கூட்டமாக கூடிய அவலம் நடந்துள்ளது.
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வாகன பாஸ் கேட்டு, இன்று காலை 10 மணியளவில் ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் சமூக இடைவெளி என்பதே இல்லாமல் மிகவும் நெருக்கமாக மக்கள் நடமாட்டம் ஏற்பட்டது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிற்கதவை மூடினர். மேலும், வாகன பாஸ் கேட்டு வந்துள்ளவர்களில், தகுதியற்றவர்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்த இடம் போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் மக்கள் கூட்டகூட்டாக சமூக இடைவெளி இன்றி சென்றனர்.
அதேபோல் சாந்தி சவுக் லால் குயன் பஜாரில் மக்கள் ஒன்றாக கூடினர்.