செய்திகள்
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றார்
சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அப்பதவியில் இருந்தபோது அயோத்தி நிலம் தொடர்பான சர்ச்சை, ரபேல் போர் விமான பேரம் உள்ளிட்ட சில முக்கியமான வழக்குகளில் தீர்ப்பளித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெற்றார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவிக்கு ரஞ்சன் கோகாய் பெயரை சமீபத்தில் பரிந்துரை செய்தார்.
பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் இந்த பதவிக்கு ரஞ்சன் கோகாய் பெயர் பரிந்துரைக்கப்பட்டதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சில நீதிபதிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மாநிலங்களவை எம்.பி. ஆக பதவி ஏற்பதன் மூலம் நீதித்துறைக்கும் பாராளுமன்றத்துக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் ரஞ்சன் கோகாய் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.