செய்திகள்
யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு 11-ம் தேதி வரை விசாரணை காவல்
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் கைதான யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை வரும் 11-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மும்பை:
தனியார் வங்கிகள் பட்டியலில் உள்ள ‘யெஸ் வங்கி’ அதிகமான கடன்களை வழங்கியதால் வாராக்கடன் பெருகியது. இதனால் மூலதன நெருக்கடியில் உள்ளது. வங்கியின் வாராக்கடன் அதிகரித்ததால் அந்த வங்கியின் நிர்வாகத்தின் மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன்வசப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்திவைக்கும்படி கட்டுப்பாடு விதித்தது.
மேலும், வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும்வரை இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வங்கியின் நிர்வாகத்தையும் உடனடியாக மாற்றி அமைக்கவும் உத்தரவிட்டது.
இதற்கிடையே, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரின் மும்பை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
இதையடுத்து, யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று கைது செய்தது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில் மும்பையில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில்
ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். வரும் 11-ம் தேதிவரை அமலாக்கத்துறையினர் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.