செய்திகள்
டெல்லி வன்முறை: அமித்ஷா பதவி விலகக்கோரி பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தர்ணா
டெல்லி வன்முறைக்கு பொறுப்பெற்று அமித்ஷா பதவி விலகக்கோரி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
சிஏஏ-க்கு எதிராகவும், ஆதரவாகவும் தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும், 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் 654 பேர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில், டெல்லி வன்முறை தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி வன்முறைக்கு பொறுப்பெற்று உள்துறை மந்திரி அமித்ஷா பதவி விலகவேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த தர்ணாவில் ராகுல் காந்தி, சசீ தரூர், ஜோதி மணி உள்ளிட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.