செய்திகள்
கோப்புப்படம்

வுகான் நகருக்கு இந்திய ராணுவ விமானம் இன்று புறப்படுகிறது

Published On 2020-02-26 09:14 GMT   |   Update On 2020-02-26 09:14 GMT
இந்திய விமானப்படையின் ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள வுகான் நகருக்கு புறப்படுகிறது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் உருவான சீனாவின் வுகான் நகரில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. 2 ஏர்-இந்தியா விமானங்களை அனுப்பி 650-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு கொண்டுவந்தனர்.

பின்னர் அவர்களை இரு குழுக்களாக பிரித்து மருத்துவ முகாமில் வைத்து கண்காணித்தனர். 14 நாட்களுக்கு பிறகு அனைவரும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையே வுகான் நகரில் தவிக்கும் மேலும் பல இந்தியர்களை மீட்டு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது.

இதற்காக இந்திய விமானப்படையின் ராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானத்தை அனுப்ப சீனாவிடம் அனுமதி கேட்டது. ஆனால் சீன அரசு அனுமதி தர தாமதம் செய்து வந்த நிலையில் தற்போது இந்திய விமானம் சீனாவுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய ராணுவ விமானம் இன்று சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறது. விமானத்தில் சீனாவுக்கு மருத்துவ உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதை சீனாவிடம் வழங்கிவிட்டு 100 இந்தியர்களை விமானத்தில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News