செய்திகள்
புல்வாமாவில் 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலில் அன்சர் காஸ்வா உல் ஹிந்த் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம், சிஆர்பிஎப் மற்றும் மாநில போலீசார் நேற்று இரவு அப்பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர் இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் அன்சர் காஸ்வா உல் ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.