செய்திகள்
காஷ்மீரில் இருந்து 7 ஆயிரத்து 200 பாதுகாப்பு படையினர் வாபஸ் - உள்துறை அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 72 கம்பெனி பாதுகாப்பு படையினரை வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 மற்றும் 35 ஏ ஆகிய சட்டப்பிரிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இந்த நடவடிக்கைகளின்போது ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தளங்களில் இருந்து கூடுதல் பாதுகாப்பு படையினர் காஷ்மீருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலைமை தற்போது சுமூகமாக உள்ளதையடுத்து கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள 72 கம்பெனி படையினரை (சுமார் 7200 வீரர்கள்) வாபஸ் பெறுவதாக உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் உள்பட சுமார் 7200 வீரர்களை வாபஸ் பெறும் நடைமுறை உடனடியாக அமலுக்கு வர உள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.