செய்திகள்
இஸ்ரோ பேருந்துகளை மறித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள், இஸ்ரோ பேருந்துகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பொதுமக்கள், மாணவர்கள் திரண்டு குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். உபி. மற்றும் கர்நாடகாவில் நேற்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரள மாநில மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நேற்று இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரூர்கடா சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த வழியாக இஸ்ரோ ஊழியர்கள் வந்த பேருந்துகளை மறித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.