செய்திகள்
நித்யானந்தா

நித்யானந்தாவை கைது செய்வதில் சட்ட சிக்கல்- கர்நாடக போலீசார் திணறல்

Published On 2019-12-20 06:26 GMT   |   Update On 2019-12-20 06:26 GMT
நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூர்:

சாமியார் நித்யானந்தாவை கடத்தல் வழக்கில் குஜராத் போலீசாரும், பாலியல் வழக்கில் கர்நாடகா போலீசாரும் தேடி வருகிறார்கள்.

நித்யானந்தா மீது சென்னை உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் புதுப்புது புகார்கள் கூறப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்ததால் நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

அவர் ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

கைலாசா நாட்டில் குடியுரிமை கேட்டு 40 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாக நித்யானந்தா வீடியோ வெளியிட்டார்.

அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் திராவிட நாத்திகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே பாலியல் வழக்கில் நித்யானந்தாவை கண்டு பிடிக்க பெங்களூர் போலீசாருக்கு கர்நாடகா ஐகோர்ட்டு கெடு விதித்திருந்தது. கடந்த 18-ந்தேதியுடன் கெடு முடிந்த நிலையில் நித்யானந்தாவை கண்டுபிடிக்க சி.பி.ஐ. மூலமாக இன்டர்போல் உதவியை நாடி இருப்பதாக கர்நாடகா போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.

ஆனால் நித்யானந்தா இருப்பிடத்தை கண்டு பிடிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளதாகவும், இதனால் அவரை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து கர்நாடகா போலீசார் கூறுகையில், ‘நித்யானந்தாவை கைது செய்வதில் பல சட்ட சிக்கல்கள் இருப்பதால் தான் சி.பி.ஐ. மூலமாக ‘இன்டர்போல்’ உதவியை நாடி உள்ளோம். அவரை வலைவீசி தேடி வருகிறோம்.

அவரை கைது செய்யாததால் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் இது குறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது’ என்றனர்.
Tags:    

Similar News