செய்திகள்
குற்றவாளிகள் சுட்டுக்கொலை

உத்தரபிரதேசத்தில் கொலை குற்றவாளிகள் கோர்ட்டு அறையில் சுட்டுக்கொலை

Published On 2019-12-17 19:50 GMT   |   Update On 2019-12-17 19:50 GMT
உத்தரபிரதேசத்தில் பழிக்கு பழியாக கோர்ட்டு அறையில் மாஜிஸ்திரேட்டு கண் முன்பே கொலை குற்றவாளிகள் 2 பேரையும் மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
பிஜ்னோர்:

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நஜிபாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹாஜி எஹ்சான், நிலத்தரகர். 6 மாதங்களுக்கு முன்பு அவரையும், அவரது மருமகனையும் ஒரு தகராறில் ‌ஷாநவாஸ் என்பவர் ஜப்பார் என்ற கூட்டாளியுடன் சேர்ந்து கொலை செய்தார். போலீசார் ‌ஷாநவாஸ், ஜப்பார் ஆகியோரை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

குற்றவாளிகள் 2 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். எஹ்சானின் மகன் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க திட்டமிட்டார்.

இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக குற்றவாளிகள் 2 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் திகார் சிறையில் இருந்து பிஜ்னோரில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அழைத்துவந்தனர். இதை அறிந்த எஹ்சானின் மகன் உள்பட 3 பேர் துப்பாக்கிகளுடன் கோர்ட்டுக்கு வந்தனர்.

கோர்ட்டு அறையில் மாஜிஸ்திரேட்டு கண் முன்பே குற்றவாளிகள் 2 பேரையும் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனே போலீசார் அவர்களை காப்பாற்ற பாய்ந்து சென்றனர். இதில் ‌ஷாநவாஸ் அந்த இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தார். மற்றொரு குற்றவாளி ஜப்பார் மற்றும் 2 போலீசார் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.

பின்னர் கொலையாளிகள் 3 பேரும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று கோர்ட்டு வளாகத்திலேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். காயம் அடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட்டு யோகே‌‌ஷ் குமார் மயிரிழையில் உயிர் தப்பினார்.
Tags:    

Similar News