செய்திகள்
பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் 2 பேர் வீர மரணம்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.
ஜம்மு:
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தி ரஜோரி மாவட்டத்துக்குட்பட்ட சுந்தர்பேனி எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படையினர் இன்று துப்பாக்கிகளால் சுட்டும் மோர்ட்டார் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.
இதன் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவ செய்ய முயற்சி மேற்கொண்டனர்.
இதற்கு இந்திய தரப்பினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
அதேபோல் காஷ்மீரின் பண்டிபூர் மாவட்டதிற்குட்பட்ட குரிஷ் எல்லைக்கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் இன்று நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதால் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.