செய்திகள்
உத்தவ் தாக்கரே

குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்து - முஸ்லிம் பிரிவினைக்கு வழிவகுக்கும்: சிவசேனா குற்றச்சாட்டு

Published On 2019-12-09 08:12 GMT   |   Update On 2019-12-09 08:12 GMT
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மறைமுகமாக இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவது போல் உள்ளது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.
மும்பை:

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.

இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது.

ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதா மறைமுகமாக இந்து - முஸ்லிம் பிரிவினையை உருவாக்குவது போல் உள்ளது என சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது.



இது குறித்து சிவசேனாவின் சாம்னா நாளிதழின் தலையங்க பக்கத்தில், ‘இந்தியாவில் ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதா புதிய பிரச்சினையாக உருவாகி உள்ளது. இந்த மசோதா மூலம் சட்ட விரோதமாக புலம் பெயர்ந்த இந்துக்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்வது நாட்டில் மதப்போருக்கு வழி வகுக்கும் செயலாக தெரிகிறது.

நாட்டின் நலனுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது போல் இல்லை. இது வாக்கு வங்கி அரசியலுக்காகவும், இந்து - முஸ்லிம் இடையே மறைமுகமாக பிரிவினை உண்டாக்குவதும் போன்று தெரிகிறது’, என குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News