செய்திகள்
உத்தரபிரதேசம்: லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி மீது கார் மோதியதால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் இச்சா மாவட்டத்தில் உள்ள சாலையில் இன்று ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பயணித்தனர்.
ஹிம்மெட்புர் பகுதியை கார் கடந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் முன்னே சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது வேகமாக மோதியது.
கார் மோதிய வேகத்தில் அதன் எரிபொருள் குழாயில் திடீரென தீப்பற்றி கார் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பயணிகள் அனைவரும் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்து நடந்த பகுதிக்கு அருகே இருந்த மக்கள் சிலர் காரில் சிக்கித்தவித்த நபர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அவர்களால் 15-வயது நிரம்பிய சிறுமியை மட்டுமே தீக்காயங்களுடன் மீட்க முடிந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு பெண், இரண்டு குழந்தைகள் உள்பட 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமையை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.