செய்திகள்
மாநிலங்களவையில் பிரதமர் மோடி

பாஜக இந்த கட்சிகளிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் : பாராளுமன்றத்தில் மோடி அறிவுரை

Published On 2019-11-18 11:10 GMT   |   Update On 2019-11-18 11:10 GMT
பாரளுமன்ற நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சியிடமிருந்து பாஜக பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
டெல்லி:

இந்திய பாராளுமன்றத்தின் 250-வது கூட்டத்தொடர் இன்று தொடங்கி, நடைபெற்று வருகிறது. சிறப்புவாய்ந்த இந்த கூட்டத்தொடரில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

மாநிலங்களவையில் இன்று பிற்பகல் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:

பாராளுமன்றத்தின் இந்த மாநிலங்களவை வரலாற்று சிறப்பு மிக்க தருணங்களை உருவாக்கியும், பார்த்தும் உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவ நினைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை அளிக்கிறது. 370-வது சட்டப்பிரிவு ரத்து, முத்தலாக் முறை ஒழிப்பு, ஜிஎஸ்டி போன்ற மசோதாக்கள் நினைவேற்றப்பட்டதில்  இந்த மாநிலங்களவை முக்கிய பங்காற்றியுள்ளது. 

இங்கு சபாநாயகரின் இருக்கையை  முற்றுகையிடாமலேயே அனைத்து கட்சிகளும் மக்களின் இதயத்தை வெல்லலாம். இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளையும் நான் பாராட்டுகிறேன். 



இந்த இரு கட்சிகள் மட்டும்தான் பாராளுமன்ற நடைமுறைகளை முறையாக பின்பற்றுகின்றன. இந்த கட்சிகளின் உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை ஒருபோதும் முற்றுகை இட்டதில்லை. எனினும், தங்களது கருத்துக்களை சபையில்  உறுதியாக பதிவு செய்து வருகின்றனர். 

ஆகவே, பாராளுமன்றத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பதை இந்த இரு கட்சிகளிடம் இருந்து பாஜக உள்பட பிற கட்சிகள் பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும்.  

இவ்வாறு அவர் பேசினார்.  
Tags:    

Similar News