செய்திகள்
பிரதமர் மோடி - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் ஜெயில் - ரூ.5 லட்சம் அபராதம்

Published On 2019-11-13 05:18 GMT   |   Update On 2019-11-13 11:47 GMT
இந்திய ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்களை தவறாகவும், அனுமதியின்றியும் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.
புதுடெல்லி:

இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது.

தற்போதுள்ள சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும் சட்டத்தின்படி (1950) இக்குற்றத்தை முதல் தடவை செய்தால் ரூ.500 அபராதமாக விதிக்கப்படுகிறது. அதே தவறை மறுபடியும் செய்தாலும் கூடுதலாக அபராதம் விதிக்கப்படுவதில்லை.

சின்னங்கள் மற்றும் பெயர்களை தனியார் வர்த்தக மற்றும் விளம்பரங்களில் பயன்படுத்தினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சின்னங்கள் மற்றும் பெயர்களை முறையற்ற வகையில் பயன்படுத்துதலை தடுக்கும் சட்டத்தில் நுகர்வோர் விவகார அமைச்சகம் திருத்தம் கொண்டு வருகிறது.

சில தனியார் நிறுவனங்கள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தின. இதற்காக அந்த நிறுவனங்கள் மத்திய அரசிடம் மன்னிப்பு கேட்டு இருந்தன.

இதையடுத்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சின்னங்கள் ஆகியவற்றை தவறாக அனுமதியின்றி பயன்படுத்தினால் விதிக்கப்படும் அபராதம் புதிய சட்டத்தின் கீழ் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி ஜனாதிபதி, பிரதமர் புகைப்படங்கள் மற்றும் தேசிய கொடி, மகாத்மா காந்தி, அசோக சக்கரம், பாராளுமன்றம் தர்மா சக்கரம், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம் மற்றும் பெயர்கள் வர்த்தகம் மற்றும் விளம்பரங்களுக்கு தவறாகவும், அனுமதியின்றி பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

அதே தவறை மீண்டும் செய்தால் ரூ.5 லட்சம் அபராதம் மற்றும் 6 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

இந்த புதிய சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வருகிறது.
Tags:    

Similar News