செய்திகள்
ஏவுகணை (கோப்பு படம்)

அணு ஆயுத ஏவுகணையை நாளை மறுநாள் பரிசோதனை செய்கிறது இந்தியா

Published On 2019-11-06 09:41 GMT   |   Update On 2019-11-06 09:41 GMT
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கி உள்ள அணு ஆயுத ஏவுகணை நாளை மறுதினம் பரிசோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புவனேஸ்வர்:

இந்திய ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சார்பில் கே4 அணு ஆயுத ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையானது, நீர்மூழ்கி கப்பலில் இருந்து சுமார் 3500 கிமீ தூரம் வரை பாய்ந்து எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் சக்திவாய்ந்தது.

இந்த ஏவுகணையை கடந்த மாதம் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது. பின்னர் சில தொழில்நுட்ப காரணங்களுக்காக அது தள்ளி வைக்கப்பட்டது. 

அதன்படி கே4 அணு ஆயுத ஏவுகணையை நாளை மறுநாள் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட உள்ளதாக  அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரிசோதனையின்போது, ஏவுகணையின் முழு இலக்கான 3500  கிமீ தொலைவுக்கு சோதனை செய்யப்படுமா, அல்லது குறுகிய தொலைவுக்கு மட்டுமே சோதனை செய்யப்படுமா என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும், நீண்ட தூர சோதனைக்கான முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News