செய்திகள்
காளி பூஜையில் பங்கேற்ற மேற்கு வங்க ஆளுநர்

மம்தா பானர்ஜி வீட்டில் நடைபெற்ற காளி பூஜையில் ஆளுநர் பங்கேற்பு

Published On 2019-10-28 06:58 GMT   |   Update On 2019-10-28 06:58 GMT
மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டில் நடைபெற்ற காளி பூஜையில் அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் பங்கேற்றார்.
கொல்கத்தா:

துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்ற மேற்கு வங்காளத்தில் கடந்த அக்டோபர் 11-ம் தேதி அரசு சார்பில் துர்கா பூஜை நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அம்மாநிலத்தின் தலைநகர் கொல்கத்தாவில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட துர்கா பூஜை நிகழ்ச்சியில் முதல்மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது அதிகாரிகளுடன் பங்கேற்றார். ஆனால் தனக்கு நிகழ்ச்சியை கண்டுகளிக்க வசதியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை என ஆளுநர் குற்றம் சாட்டினார். 

மேலும், இந்த அவமானம் எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கு வங்காள மக்களுக்கும் தான் என தெரிவித்தார். ஆளுநரின் இந்த குற்றச்சாட்டு மேற்குவங்காளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இதற்கிடையில்,   காளிபூஜைக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு மம்தா பானர்ஜி வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவதாக ஆளுநர் ஜகதீப் கடிதம் எழுதியிருந்தார். அவருக்கு பதிலளித்த முதல்மந்திரி பானர்ஜி தன் வீட்டில் நடைபெறும் காளி பூஜையில் கலந்துகொள்ளுங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி, மேற்கு வங்காள ஆளுநர் ஜகதீப் தங்கர் தனது மனைவியுடன் நேற்று இரவு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வீட்டில் நடைபெற்ற காளி பூஜையில் பங்கேற்றார். காளி பூஜை நிறைவடைந்த பின்னர் தனது மனைவியுடன் இணைந்து மம்தா பானர்ஜியிடம் சிறிது நேரம் பேசிய ஆளுநர் ஜகதீப் தங்கர் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

மேற்கு வங்காளத்தில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில் ஆளுநர் ஜகதீப் தங்கர் முதல்மந்திரி மம்தா பானர்ஜி வீட்டில் நடைபெற காளிபூஜையில் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Tags:    

Similar News