செய்திகள்
பாஜக கொடி (கோப்பு படம்)

அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு

Published On 2019-10-25 11:25 GMT   |   Update On 2019-10-25 11:25 GMT
அரியானாவில் 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் ஆதரவை அளிப்பதாக தெரிவித்துள்ளதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது.
சண்டிகார்:

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. 90 தொகுதிகளை கொண்ட அரியானாவில் பாஜக 40 தொகுதிகளும், காங்கிரஸ் 31, ஜனநாயக ஜனதா கட்சி 10, இந்திய தேசிய லோக் தளம் 1, அரியானா லோக் கித் கட்சி 1, மற்றும் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்றன.

ஆட்சி அமைக்க தேவையான 46 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்காததையடுத்து, பாஜக சுயேட்சைகளை தங்கள் வசப்படுத்த முயற்சித்தது. 

இதற்கிடையே லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ. ரஞ்சித்சிங்கிடமும் பாஜக தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அதுபோல அரியானா லோக்கித் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கோபால் கண்ட் என்பவரிடமும் பாஜக தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அவர்கள் இருவரும் பாஜக ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தனர். பெரும்பான்மைக்கு மேலும் 5 சுயேட்சைகள் ஆதரவு தேவைபட்ட நிலையில் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



இதைதொடர்ந்து, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தரம்பால் கோண்டன், நயன்பால் ராவத், சங்வாங், ராகேஷ் மற்றும் ரண்ட்ஹிர் கோலன் ஆகியோர் இன்று அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கத்தார் தலைமையில் டெல்லி சென்றனர். அங்கு பாஜக செயல்தலைவர் ஜெ.பி.நட்டாவை அவர்கள் சந்தித்தனர். 

இந்த சந்திப்பையடுத்து அரியானாவில் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க தேவையான இடங்கள் கிடைத்ததையடுத்து அரியானாவில் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

இதைதொடர்ந்து, அரியானாவில் மத்திய நிதிமந்திரி நிர்மலாசீதாராமன் தலைமையில் பாஜக சட்டமன்ற தலைவரை தேர்தெடுப்பதற்கான கூட்டம் நாளை பெற உள்ளது.
Tags:    

Similar News