செய்திகள்
வடகிழக்கு பருவமழை- கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
கேரளாவில் வடகிழக்கு பருவமழை காரணமாக இரு மாவட்ட பள்ளிகளிக்கு விடுமுறை மற்றும் 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் கனமழை பெய்யும் என கேரள மாநில பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. இரு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம், திருவனந்தபுரம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், ஆலப்புழா மற்றும் வயநாடு மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 115-204.5 மி.மீ மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல் 22, 23 மற்றும் 24 ஆகிய நாட்களிலும் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரள கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. லட்சத்தீவுகள் பகுதியிலும் காற்றின் வேகம் 45-55 கி.மீ வேகத்தை எட்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.