செய்திகள்
கைது செய்யப்பட்ட முன்னாள் பிரிவினைவாத தளபதி

காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்தின் முன்னாள் தளபதி கைது

Published On 2019-10-18 16:18 GMT   |   Update On 2019-10-18 16:18 GMT
காஷ்மீரில் 4 இந்திய விமானப்படை வீரர்களை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய பிரிவினைவாத இயக்கத்தின் முன்னாள் தளபதியை சிபிஐ கைது செய்தது.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரின் சனந்த் நகர் பகுதியில் 1990-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக், அந்த அமைப்பின் முன்னாள் தளபதி ஜாவித் அகமது மீர் போன்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் போதிய முன்னேற்றம் இல்லாததால் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. 

இதற்கிடையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட யாசின் மாலிக் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ஜாவித் அகமது மீர் வீட்டில் சிபிஐ நேற்று நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தியது. சிபிஐ நடத்திய இந்த சோதனையில் விமானப்படை வீரர்களை கொன்ற வழக்கில் தொடர்புடைய ஜாவித் அகமது மீர் கைது செய்யப்பட்டார். 

சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாவித் விசாரணைக்காக காஷ்மீரில் இருந்து டெல்லிக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
Tags:    

Similar News