செய்திகள்
ஒபியம்

உ.பி யில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒபியம் பறிமுதல்-3 பேர் கைது

Published On 2019-10-17 12:28 GMT   |   Update On 2019-10-17 12:28 GMT
உத்தர பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஒபியம் வகை போதைப்பொருட்கள் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
லக்னோ:

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் காகாதேவ் பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

மக்கள் அதிகமாக கூடும் சந்தைகள், பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது காகாதேவ் நகரின் அருகில் உள்ள ரவாட்பூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்ற 3 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரிகள் என கண்டறிந்தனர்.

அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில், 20 லட்சம் பணமும், 9 கிலோ 800 கிராம் அளவிலான ஒபியம் வகை போதைப்பொருட்களும் இருந்தன. இதையடுத்து அதிகாரிகள், அந்த மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த பணம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன, மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட ஒபியம் போதைப்பொருட்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News