செய்திகள்
இந்திய ரெயில்வே

நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் ரெயில்வே வருவாயில் ரூ.12 ஆயிரம் கோடி பற்றாக்குறை

Published On 2019-09-30 20:23 GMT   |   Update On 2019-09-30 20:23 GMT
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரெயில்வேக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்திய ரெயில்வே டிக்கெட் கட்டணம், சரக்கு கட்டணம் மற்றும் இதர வருமானங்களில் இந்த நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் (ஏப்ரல்-ஆகஸ்டு) தனது வளர்ச்சி விகிதத்தில் எந்தவொரு இலக்கையும் எட்டவில்லை என அதன் ஆவணங்களில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரெயில்வேக்கு ரூ.12 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு ரெயில்வேயின் வருவாய் 3.3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம் செலவு 8.65 சதவீதம் உயர்ந்துள்ளது. இதில் ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்கான ரூ.11,852.91 கோடி செலவு கணக்கில் சேர்க்கப்படவில்லை. இது பற்றாக்குறையாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு முடிவில் இந்த பற்றாக்குறை ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த 5 மாதங்களில் பயணிகள் மூலம் வருவாய் 9.65 சதவீத வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 4.56 சதவீதமே வளர்ச்சி எட்டப்பட்டது. அதேபோல சரக்கு கட்டணம் மூலம் 12.22 சதவீத வளர்ச்சி அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 2.80 சதவீதமே அடைய முடிந்தது.

ரெயில்வே சமீபத்தில் சில கட்டண குறைப்பு மற்றும் சலுகைகளை அறிவித்ததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இதுபற்றி ஆலோசனை நடத்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News