செய்திகள்
இந்தியாவில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய பருவ மழை
இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவ மழை அதிக அளவில் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் பருவ மழை கடந்த சில மாதங்களாக கொட்டித்தீர்த்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, பீகார், அசாம், உத்தர பிரதேசம் உள்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது.
கனமழை காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டு லட்ச கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் இந்த ஆண்டு தற்போது வரை பெய்துள்ள பருவ மழையில் அளவு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜுன் மாதம் சரிசரியை விட 33 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. ஆனால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே சராசரியை விட 33 மற்றும் 15 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் இந்த ஆண்டுக்கான பருவமழை முடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பருவமழை அதிக அளவில் பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.