செய்திகள்
அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி தனது ஏழு நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு டெல்லி திரும்பினார்.
புதுடெல்லி:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவில் 7 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
செப்டம்பர் 21-ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் அமெரிக்கா வாழ் இந்தியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஹவுடி மோடி’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டொனால்டு டிரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதையடுத்து, உலக நாட்டு தலைவர்களை சந்தித்து பேசிய பிரதமர், நேற்று (செப்டம்பர் 27) ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ஏழு நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு 8.30 மணியளவில் டெல்லி திரும்பினார். நாடு திரும்பிய பிரதமருக்கு பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.