செய்திகள்
கைது

கல்லூரி மாணவியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன் கைது

Published On 2019-09-14 04:11 GMT   |   Update On 2019-09-14 04:11 GMT
கர்நாடக மாநிலத்தில் கருக்கலைப்பின் போது உயிரிழந்த கல்லூரி மாணவியின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் கலபுர்கி நகரை சேர்ந்தவர் ஷிபராணி ஜெயபிரபு (வயது 22).

மாணவியான இவர் பைன் ஆர்ட்ஸ் கலைக்கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கு ரவிக்குமார் என்ற இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது. இதனால் ஷிபராணி கர்ப்பமானார்.

இதையடுத்து ஷிபராணி கருவை கலைக்க தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு போடப்பட்ட அதிக திறன் கொண்ட ஊசியால் ஷிபராணி உயிரிழந்தார். இதனால் பயந்துபோன ரவிக்குமார் ஷிபராணி உடலை யாருக்கும் தெரியாமல் எடுத்துச்சென்று தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள ஜாகீராபாத் காட்டுப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

இதுகுறித்து ஷிபராணியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தெலுங்கானாவில் உள்ள காட்டுப்பகுதியில் அவரது உடல் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஷிபராணியின் காதலர் ரவிக்குமாரை போலீசார் கைது செய்தனர். ரவிக்குமாரின் தந்தை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வழக்கை தெலுங்கானா போலீசார் விசாரித்து வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கு கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டம் பிரம்மபூர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்படுகிறது.
Tags:    

Similar News