செய்திகள்
சுப்ரீம் கோர்ட், டெல்லி

பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியின் பதவிக்காலம் நீட்டிப்பு

Published On 2019-09-13 09:47 GMT   |   Update On 2019-09-13 09:47 GMT
சுப்ரீம் கோர்ட்டின் அறிவுரையை ஏற்ற உத்தரப்பிரதேசம் மாநில அரசு பாபர் மசூதி இடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் பதவிக்காலத்தை தீர்ப்பு வழங்கும் வரை நீட்டித்துள்ளது.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டின் பரிந்ர்துரையின்படி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விசாரித்து வருகிறது.
 
இந்த வழக்கில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்பட பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும் ராஜஸ்தான் மாநில கவர்னராக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற கல்யாண் சிங் பெயரையும் இணைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சி.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதற்கிடையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு சுப்ரீம்கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந்தேதி உத்தரவிட்டது. மேலும் 2 ஆண்டுக்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது.

இந்த 2 ஆண்டு கால அவகாசம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிந்து விட்டது. இதையடுத்து, இந்த மாதம் 30-ம் தேதி பதவிக்காலம் முடியவுள்ள சிறப்பு கோர்ட்டு நீதிபதி சுரேந்திர குமார் கடந்த மே மாதம் சுப்ரீம் கோர்ட்டுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.



அந்த கடிதத்தில் அவர் சுப்ரீம்கோர்ட்டு அனுமதித்த 2 ஆண்டு அவகாசம் முடிந்து விட்டது. தற்போது வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. எனவே வழக்கு விசாரணையை முடிப்பதற்கு கூடுதலாக 6 மாதம் அவகாசம் தர வேண்டும் என்று கேட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி நரிமன் முன்னிலையில் நடந்தது. அப்போது அவர் சிறப்பு கோர்ட்டு நீதிபதிக்கு 6 மாதம் அவகாசம் அளிப்பது தொடர்பாக உத்தரபிரதேச அரசு வருகிற பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சிறப்பு நீதிபதி சுரேந்திர குமார் யாதவின் பதவிக்காலத்தை அவர் தீர்ப்பு வழங்கும் வரை நீட்டிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, ‘உ.பி.அரசின் நடவடிக்கை தங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது’ என குறிப்பிட்டனர்.
Tags:    

Similar News