செய்திகள்
ஜீப்புக்கு தீ வைத்த உரிமையாளர்

ஜீப்புக்கு தீ வைக்கும் வைரல் வீடியோ... உரிமையாளரை கைது செய்தது போலீஸ்

Published On 2019-09-05 04:32 GMT   |   Update On 2019-09-05 04:32 GMT
குஜராத் மாநிலத்தில் ஜீப்புக்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில், அதன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் ராஜ்கோட் கோத்தாரியா சாலையில் கடந்த 2-ம் தேதி சாலையோரம் ஒரு ஜீப் தீப்பிடித்து எரியும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. அந்த வீடியோவில், தங்க நகைகள் அணிந்திருந்த நபர் ஒருவர், ஜீப் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, அந்த ஜீப் கொழுந்துவிட்டு எரிந்தபோது அந்த இடத்தைவிட்டு அவர் செல்கிறார்.

இது தொடர்பாக போலீசின் கவனத்திற்கு வந்ததும், பக்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்திரஜித் சிங் ஜடேஜா (33) மற்றும் அவரது நண்பர் நிமேஷ் கோயல் (28) ஆகியோரைக் கைது செய்தனர்.

விசாரணையில், ஜடேஜா தனது ஜீப்பை தானே தீ வைத்து எரித்தது தெரியவந்தது. ஜீப் என்ஜின் பலமுறை முயற்சி செய்தும் இயங்காததால் விரக்தி அடைந்த அவர் அதனை அழிக்க முடிவு செய்து, சாலையோரம் வைத்து எரித்துள்ளார்.

அதனை உடனிருந்த அவரது நண்பர் கோயல் செல்போன் மூலம் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அவர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். பின்னர் டிக்டாக் செயலி மூலம் அந்த வீடியோவின் பின்னணியில் யாரோ ஒருவர் பஞ்சாபி பாடலை இணைத்து வெளியிட, அது வைரலாகி உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கவனக்குறைவாக நெருப்பை கையாண்டதாக ஜடேஜா, கோயல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். 
Tags:    

Similar News